இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து இரட்டை வசனம் பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையில் நடிகர் சித்தார்த்துக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் தமது இளம் பருவம் முதல் நடித்து வரும் சித்தார்த், சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் நடிகர்களில் முக்கியமானவர். சித்தார்த் தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, அரசியல் ரீதியான கருத்துகளையும் துணிச்சலாக வெளியிட்டு வருகிறார்.

தமது சமூக ஊடக பக்கங்களில் ஒன்றிய பாஜக மோடி அரசின் திட்டங்கள், பொதுவெளியில் நடைபெறும் முக்கிய சம்பவங்கள் குறித்து அடிக்கடி கருத்துகளை பகிர்ந்து அது சர்ச்சையாவது வழக்கம். துணிச்சலாக நடிகர் சித்தார்த் பதிவிடும் கருத்துகள் அசாதாரணமானது என பலரது பாராட்டுக்களையும் அவர் ரசிகர்களிடம் பெற்றிருக்கிறார்.

ஆனால், பல நேரங்களில் சமூக ஊடகங்களில் பகிரும் கருத்துகளை நேரில் அல்லது தொலைபேசி வாயிலாக ஊடகங்கள் நேர்காணலுக்காக பேசும்போது வெளிப்படையாக கருத்து வெளியிடுவதை சித்தார்த் தவிர்த்து விடுவார்.

இந்நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறித்து எழுந்த விவகாரத்திலும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 5 ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார்.

சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்” என்று தனது சாய்னா தெரிவித்திருந்தார்.

சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், “இறகுப்பந்து உலகின் சாம்பியன்.. கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்” என்று பதிவிட்டிருந்தார்.

இதில் இறகுப்பந்தின் ஆங்கில வார்த்தையான ஷட்டல் கார்க் என்பதை குறிக்க சித்தார்த் ”Subtle Cock” என்று ஆபாசமாக குறிப்பிட்டிருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இது பெண்களை ஆபாசமாக சித்தரிக்கிறது என்று சர்ச்சை உருவானது.

மோசமான மொழியில் சாய்னாவை சித்தார்த் அவமானப்படுத்தியுள்ளார் எனப் பலரும் நடிகர் சித்தார்த்திற்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டனர். எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் விமர்சனத்திற்கு பதிலளித்த சித்தார்த்,

“நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. “COCK & BULL” என்பதில் இருந்து தான் குறிப்பிட்டு அந்த கருத்தை பதிவிட்டேன். ஆபாசமாக பதிவு செய்ய வேண்டும் என்கிற எந்தவொரு உள்நோக்கமும் எனக்கு இல்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதனிடையே நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிரா காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், சித்தார்த்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், “உங்களின் கருத்து பெண்களை மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் உள்ளது.

ஒரு பெண்ணுக்கு எதிரான இத்தகைய மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்தை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் பெண் ஆர்வலர்கள், பெண் உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திரை மற்றும் சமூக பிரபலங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமது ட்விட்டர் பதிவில், “நாட்டுக்காக வியர்வையும் ரத்தமும் சிந்தி விளையாடும் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு எதிரான இதுபோன்ற கொச்சை வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு விளையாட்டு வீரனாக சாய்னா நேவாலுக்கு நான் ஆதரவளிக்கிறேன். அருவருப்பான வார்த்தை பயன்பாட்டை கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.