சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில், இருதரப்பு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு எல்லையோர பகுதியில் இருக்கும் நகு லா செக்டார் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் எல்லைப்பகுதியில் காவலில் இருந்தபோது மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நகு லா செக்டர் கடல்மட்டத்திலிருந்து 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கிறது

இந்த மோதலில் 4 இந்திய வீரர்களுக்கும் 6 சீனா ராணுவ வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மோதலின் போது இருதரப்பிலும் சுமார் 150 வீரர்கள் அப்பகுதியில் இருந்துள்ளனர்.

மேலும் வாசிக்க: சீனாவிற்கே திரும்ப அனுப்பப்படும் ரேபிட் டெஸ்ட் கருவிகள்- கொரோனா தோல்விகள்

இப்பிரச்சனைக்கு இருதரப்பு ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு காணப்பட்டது. இருப்பினும் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஏற்கனவே 2017-ம் ஆண்டு ஆகஸ்டில் லடாக்கில் பாங்காங் ஏரிப்பகுதியில் இந்தியா- சீனா ராணுவ வீரர்களும் கற்களை எறிந்து தாக்கிக்கொண்டார்கள். இந்தப் பகுதியில் இன்னும் எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வராத காரணத்தால் அவ்வப்போது இருநாட்டு வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.