ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசியபாதுகாப்புச் சட்டங்களை சீனா இயற்றியுள்ள நிலையில், ஹாங்காகங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது சீனாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் காலணி ஆதிக்க கீழ் இருந்து வந்த ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி சீனாவுடன் இணைந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி சீனா, ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என பிரிட்டன் கேட்டுக்கொண்டது. இதனால் தன்னுடன் இணைந்த ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள சீனா பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தது. அதன்படி, ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரைச் சீனாவுக்குக் கடத்தி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தியதால் தற்காலிகமாக அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நேரத்தில் சீனா அரசு சத்தமில்லாமல் ஹாங்காங் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த தேசிய பாதுகாப்புச் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் தொடர் போராட்டங்கள் வலுத்துள்ளன.

மேலும் வாசிக்க: ஹாங்காங்கில் வெடித்தது போராட்டம்.. சீனா மீது பொருளாதாரத் தடை விதிக்க எச்சரிக்கும் அமெரிக்கா

சீனாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன்,கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சீனாவின் இந்த செயலுக்கு பதிலடி தரும்வகையில், இங்கிலாந்து சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹாங்காங் மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

ஹாங்காங் மக்களுக்கான சிறப்பு இங்கிலாந்தின் பாஸ்போர்ட் என்பது, ஹாங்காங் சீனாவுடன் இணைவதற்கு முன்பான அதாவது1997 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஹாங்காங் மக்களுக்கு இங்கிலாந்து வழங்கியிருந்து. இந்த பாஸ்போர்டை தற்போது 3,00,000க்கும் அதிகமான ஹாங்காங்கில் வசிப்போர் வைத்துள்ளனர். இந்த பாஸ்போர்ட் மூலம் பிரிட்டன் பயணம் செய்பவர்களுக்கு ஆறுமாதம் வரை அங்கு தங்க விசா தேவையில்லை.

ஆகவே, சீனா அவர்களை ஒடுக்க முயலும் நேரத்தில், தன் குடிமக்கள் என்ற முறையில், இங்கிலாந்து சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, 350,000 வெளிநாடு வாழ் ஹாங்காங் மக்களுக்கான விசா உரிமைகளை நீட்டிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இது குறித்துப் பேசிய வெளியுறவுச் செயலர் டொமினி க்ராப், “சீனா இந்த சர்ச்சைக்குறிய தேசிய பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால், பிரட்டிஷ் சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹாங்காங் மக்கள் 6 மாதத்திற்கு பதிலாக 12 மாதங்கள் வரை விசா இல்லாமல் இங்கிலாந்தில் தங்க அனுமதிப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெற அனுமதிப்பதோடு வரும் காலங்களில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் வழிவகை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.