சென்னை எழும்பூர் தாய் -சேய் மருத்துவமனையில் இன்று 8 பேர் உட்பட இதுவரை கொரோனா தொற்று உறுதியான கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 669 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 509 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தாய் -சேய் நல மருத்துவமனையில் இன்று மட்டும் 8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மே 9 வரை 18 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், இந்த மருத்துவமனையில் மட்டும் கொரோனா தொற்று உறுதியான கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வாசிக்க: மத்திய சுகாதாரத் துறையின் புதிய அறிவிப்பால் அச்சத்தில் கொரோனா நோயாளிகள்

இவர்களில் 10 பேர் புளியங்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள். 10 பேர் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் பிரபலமான தாய் -சேய் மருத்துவமனைகளில் ஒன்றான எழும்பூர் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு சராசரியாக 40 -50 வரையிலான எண்ணிக்கையில் பிரசவம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது