கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், “1998ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது” என்று வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணாக தற்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய தேவையில்லை. இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை. அதனால் தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- தனிப்படை குழு அமைப்பு