கொரோனா நிதியுதவி வழங்கும் சிறுவர், சிறுமியருக்கு திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழலில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என பல தரப்பினரும் நிதியுதவி அளித்திடுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கொரோனாவை தடுக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு உதவும் வகையில் அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். இந்த கொரோனா நிதியுதவி குறித்த தகவல்களையும் தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்து வருகிறது.

இதுவரை கொரோனா நிதியாக 186.15 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறார்கள் பலரும் தாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்துத் தரப்பினரும் தாராள நிதி வழங்கி உதவ வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதில், தங்களின் சின்னஞ் சிறு கனவுகளை அடைவதற்காக சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.

எனவே கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறார்கள், சிறுமிகள் உள்ளிட்ட பிள்ளை செல்வங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் உலக பொதுமறையாம் திருக்குறள் நூலொன்று என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நேரடி எழுத்துத் தேர்வு மூலம் பருவத் தேர்வுகள் நடத்தப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்