கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் 7.22 லட்சம் அரசுப் பணிக்கு 22 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்தனர் என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை 7.22 லட்சம் ஒன்றிய அரசுப் பணிக்கு 22 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்தனர் என்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் துறை இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில், “கடந்த 2014 – 2022 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் புதிதாக 7 லட்சத்து 22 ஆயிரத்து 311 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த பதவிக்கு மொத்தம் 22 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்திருந்தார்கள்.

2021- 2022 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 850 பேர் நியமிக்கப்பட்டனர். 2020-21 ஆம் ஆண்டில் 78,555 பேர், 2019-20 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 47ஆயிரத்து 96 பேர், 2018-19 ஆம் ஆண்டில் 19,76,147 பேர் நியமிக்கப்பட்டனர். 2016-17 ஆம் ஆண்டில் 1,01,333 பேரும், 2014-15 ஆம் ஆண்டில் 1,30,423 பேரும் நியமிக்கப்பட்டனர்.

ஒட்டுமொத்தமாக இந்தப் பணியிடங்களுக்கு 22 கோடியே 5 லட்சத்து 99ஆயிரத்து 238 விண்ணப்பங்கள் வந்தன. 2021-22 ஆம் ஆண்டில் 1,86,71,121 விண்ணப்பங்களும், 2020-21 ஆம் ஆண்டில் 1,80,01,469 கோடி விண்ணப்பங்களும்,

2019-20 ஆம் ஆண்டில் 1,78,39752 விண்ணப்பங்களும், 2018-19 ஆம் ஆண்டில் 5,0936,479 விண்ணப்பங்களும் வந்தன. 2017-18 ஆம் ஆண்டில் 3,94,76,878 விண்ணப்பங்களும், 2016-17 ஆம் ஆண்டில் 2,28,99,612 விண்ணப்பங்களும், 2016-17 ஆம் ஆண்டில் 2,95,51,844 விண்ணப்பங்களும், 2014-15 ஆம் ஆண்டில் 2,32,22,083 விண்ணப்பங்களும் வந்தன.

2021-22 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டு வந்த உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டம் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” என்று இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.