மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை, முதல்வர் மம்தா பானர்ஜி பதவி நீக்கம் செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் மேற்கு வங்க மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி இருவரும் கடந்த 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்கக் கொல்கத்தா நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி வழங்கியது.

கடந்த 26 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பார்த்தா, நடிகை அர்பிதாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து பார்த்தா சட்டர்ஜிக்கு சொந்தமான தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜ்டங்கா பகுதியிலும், பெல்ஹாரியாவிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.

சட்டர்ஜிக்கு சொந்தமான வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பூட்டை உடைத்துச் சென்று ஆய்வு செய்து கட்டுக்கட்டாக ரூ.28 கோடி ரொக்கப்பணம், நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தவிர அவரது வீட்டிலிருந்து 20 செல்போன்கள், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

ஏற்கனவே கடந்த 5 நாட்களுக்கு முன் பார்த்தா சட்டர்ஜிக்கு சொந்தமான வீட்டில் ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் பல முக்கிய ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தற்போது பார்த்தா சட்டர்ஜியை அமைச்சரவையில் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி நீக்கி உள்ளார்.