விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி பலியான தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே திருமண விழா ஒன்றில் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட சிறுவன் தினேஷ் (13 வயது) மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார். பின்னர் முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தகவலை அறிந்து துயருற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத – கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன்.

13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன். இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை மூட வேண்டும்- உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்