சென்னையை வாட்டும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும் தப்பவில்லை. அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன் என்று வேதனையுடன் பேசியிருக்கிறார்.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அனைத்து தரப்பினரையும் தண்ணீர் பிரச்சனை வெகுவாக பாதித்துள்ளது. இந்த தண்ணீர் பிரச்சனையில் இருந்து பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியமும் தப்பவில்லை.

நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் “கூர்கா” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தன்னுடைய தண்ணீர் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

அப்போது பேசிய எஸ்பிபி தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறைக்கு நாம்தான் காரணம் என்றார். மேலும் தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல வி‌ஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சிறிய அளவில் தண்ணீரை பயன்படுத்தும் முறைகள் உள்ளன. அவற்றை அன்றாடம் நாம் பயன்படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது.

தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத்தாமல் வாரத்திற்கு இரண்டு ஆடைகளை மட்டும் மாற்றி மாற்றி பயன்படுத்தினால் சலவைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மிச்சமாகும். நாம் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அடுத்த தலைமுறையினருக்கு பணம், சொத்து கொடுக்கலாம்.

ஆனால் அதை விட முக்கியம் தண்ணீர். அதனால் அவர்களுக்கு தண்ணீர் சேமித்து கொடுக்க வேண்டும். மேலும் நான் குளிப்பதற்கு ஒரு அரை வாளி தண்ணீருக்காக அரை மணி நேரமாக வீட்டில் காத்து கொண்டு இருந்தேன் என்று கூறினார்.