உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு ஒன்றிய அரசே காரணம். நன்றாகப் படித்த மாணவன் நவீனுக்கு, இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை என கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 7-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கார்கிவ் நகருக்குள் ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்ததால் அவர்களுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் சண்டையிட்டனர். அப்போது கார்கிவ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள எரிவாயு குழாயை ரஷ்யப் படையினர் குண்டு வைத்து தகர்த்தனர்

கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மருத்துவ மாணவரும் உயிரிழந்தார். இது உக்ரைனில் உள்ள மற்ற இந்திய மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு ஒன்றிய அரசின் நீட் தேர்வே காரணம் என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள குமாரசாமி, “போர் நடைபெறும் உக்ரைனில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் மரணம் அடைந்திருப்பது, நீட் தேர்வின் பிரதிபலிப்பாகும்.

நவீன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96 சதவீதமும், 12ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருந்தபோதும், இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு அதிக சதவீத மதிப்பெண் பெறுவது எளிதானது அல்ல. இருந்தும் மருத்துவ சீட் மறுக்கப்பட்டது.

இதனால் நவீன் தனது மருத்துவக் கனவை நனவாக்குவதற்காக உக்ரைன் சென்றார். அவரது மரணத்திற்கு யார் பொறுப்பு? தகுதி என்ற போர்வையில் திறமையான, பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நுழைவுத் தேர்வுகளால் உயர்கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, ஏழைகளுக்கு மறுக்கப்படுகிறது.

அரசு கல்லூரி மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது இயலாத காரியம். இந்த உண்மையை உணர்ந்து, பயிற்சி மையங்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்தி நவீன் போன்ற மாணவர்களின் சடலங்களின் மீது ஆட்டம் போடுகின்றன.

நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பின்னணியில் இருப்பது யார்? அதன் பின்னணியில் ஒன்றிய மோடி அரசு செயல்படுகிறதா என சந்தேகம் எழுகிறது. பணக்காரர்களுக்கு உயர்கல்வி வழங்க மட்டுமே உள்ள நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்” என்று மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.