முகேஷ் அம்பானி வீட்டின் முன் வெடிபொருட்களுடன் கார் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த காரின் உரிமையாளர் தீடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் வெடிபொருட்களுடன் மர்ம கார் நிறுத்தப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த காரில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன. அவை ராணுவ தரத்தில் இல்லை என்றும் கட்டுமானம், சுரங்கம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வணிக தரத்தில் இருந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அந்த காரின் உரிமையாளர் விக்ரோலி பகுதியைச் சேர்ந்த ஹிரென் மன்சுக் என்பதும், கார் திருடப்பட்டு அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது.

[su_image_carousel source=”media: 22659,22658″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திய நபர் முகக்கவசம் அணிந்து இருந்ததால் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. அந்த கார் தொடர்புடைய மற்றொரு சிசிடிவி பதிவில், அந்த கார் மும்பை நகருக்குள் செல்வதும், அதைத் தொடர்ந்து ஒரு இன்னோவா கார் செல்வதும் தெரியவந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 45 வயதான காரின் உரிமையாளர் ஹிரென் மன்சுக் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் மும்பை அருகே உள்ள ஓடைப்பகுதியில் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், விபத்து மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், “முகேஷ் அம்பானி வீட்டின் முன் கண்டுபிடிக்கப்பட்ட காரின் உரிமையாளர் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அந்த காரின் உண்மையான உரிமையாளர் இல்லை. அவர் அந்த காரை பராமரித்தே வந்தார். அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்படுகிறது. இந்த விசாரணை பயங்கரவாதிகள் தடுப்பு படைக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முகேஷ் அம்பானி வீட்டின் முன் காரில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையைத் தேசியப் பாதுகாப்பு முகமைக்கு மாற்ற வேண்டும் என்றும் மகாராஷ்டிர பாஜக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதாவின் 21வது பிறந்தநாள் இன்று