சென்னை அண்ணா நகர் என்.எஸ்.கே நகரில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர்  ஆய்வு செய்தனர். 

பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறிய விவரம் பின்வருமாறு : 

சென்னையில் ஒரு சில மண்டலங்களில் மட்டும் பாதிப்பு அதிகமாகி உள்ளது. 

அந்த இடங்களில் இரவு நேரங்களில் சோதனை செய்ய ஏற்பாடு செய்து உள்ளோம். மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் தெருக்களில் மைக்ரோ அளவிலான கட்டுபாட்டு பகுதி ஏற்படுத்தப்படுகிறது என்றார்.  

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: கொரோனா பாதிப்பு குறைய துவங்கி உள்ள இந்த நேரத்தில் முகக்கவசம் அணிவதை நிறுத்தினால் பாதிப்பு அதிகமாகும். 

எனவே பொதுமக்கள் அடுத்த 3 மாதத்திற்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது, 

எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். 

அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டாம் என்று அவர்களுக்கு கூறி உள்ளோம். 

தனி நபர் வீடுகளில் தகரம் அடிப்பதை 25 நாட்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தவறுதல் நடைபெற்று இருக்கலாம் அவ்வாறு நடைபெற்று இருந்தால் அது உடனடியாக சரி செய்யபடும். 

சென்னையில் முன்பெல்லாம் ஒரு பகுதியில் 10 நபர்கள் அல்லது 5 நபர்கள் இருந்தால் மட்டுமே தடை செய்யப்பட்ட பகுதியாக  அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 2 நபர்கள் இருந்தால் கூட தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து உள்ளோம் என்றார்.

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்பவர்களுக்கு புது கட்டுப்பாடுகள் விதித்த சென்னை மாநகராட்சி