மக்கள் விரோத போக்கை தொடர்ந்தால் ராஜபக்சே குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலைதான் மோடி அரசுக்கும் ஏற்படும் என மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ எச்சரித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய விலை உயர்ந்திருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி,

கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், தலையில் மண் அடுப்புகளை சுமந்தும், ஆட்டோவிற்கு கயிறு கட்டி இழுத்தும் நூதன முறையில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ கூறும்போது, “பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு பொருளாதாரம் மீண்டு வரும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்தால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வார் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது.

எதிர்கட்சி என்பதால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்மறை கருத்துக்களை வைக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற நாள் முதல் பொய்யான, தகுதிக்கு தகாத கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

துபாய் பயணத்தின் போது என்ன செய்தார் என்பதை முதலமைச்சர் வெளிச்சம்போட்டு சொல்லியிருக்கிறார், ஆனால் அதை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை பேசி உள்ளார்.

மேலும் முதலமைச்சரின் டெல்லி பயணத்தின் போதும் தமிழகத்தின் முக்கியமான 14 கோரிக்கைகளை பிரதமரிடம், ஒன்றிய அமைச்சரிடம் வைத்துள்ளார். தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் முதலமைச்சர் நாளொரு பொழுதும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.

ராஜபக்சே அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் தவறான ஆட்சி முறையால் இலங்கையில் கடுமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இலங்கை மக்கள் ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாமல், கடும் மின் வெட்டால் அவதிப்படு வருகின்றனர்.

அதே போன்ற மக்கள் விரோத ஆட்சியை ஒன்றிய அரசும் கடைபிடித்தால், இலங்கை நிலைதான் விரைவில் இந்தியாவிற்கும் ஏற்படும். இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் வீடுகளுக்கு முன்பு மக்கள் முற்றுகை ஈட்டுள்ளனர். உயிருக்கு பயந்து எந்த நேரத்திலும் ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல கூடிய சூழல் உள்ளது.

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்திற்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலைதான் மோடி அரசுக்கும் தமிழக பாஜக தலைவர்களுக்கும் ஏற்படும். இலங்கை தற்போது சிக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை இந்தியா பயன்படுத்திக்கொண்டு நிதி கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்களிடம் தமிழ் மீனவர்களுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது, இலங்கை தமிழ் மக்களுக்கு மாநில சுயாட்சி உள்ளிட்ட உரிமைகளை பெற்று தர இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.