மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லம் நாளை (ஜனவரி 28) திறக்க தடையில்லை எனவும், அது தொடர்பான வழக்கு முடியும் வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி கிடையாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுவில், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை நீதிமன்றம் அறிவித்த பிறகும், அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாகவும் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதனிடையே, ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கான டெபாசிட் தொகையை செலுத்தியதால் அவரது இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக விளக்கம் அளித்த தமிழக அரசு, மக்கள் பார்வைக்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நாளை (ஜனவரி 28) திறக்கவிருப்பதாக அறிவித்தது.

ஜெயலலிதா வீட்டை மக்கள் வரிப்பணத்தில் ரூ.68 கோடி கொடுத்து வாங்கும் அதிமுக அரசு…

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு இன்று (ஜனவரி 27) விசாரணைக்கு வந்தபோது, வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவு இல்லமாக நாளை திறந்து வைக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு முடியும் வரை பொதுமக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்க கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.79 கோடி செலவில் உருவான ஜெயலலிதா நினைவிடம்: முதல்வர் பழனிசாமி திறப்பு