கொரோனா காலத்திலும் இந்திய, சீன எல்லைப் பகுதிகளான லடாக், அக்ஸாய் சின்னில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகள் சலிக்காமல் ஒருவருக்கு ஒருவர் இணையாக தங்கள் ராணுவப் படைகளைக் குவித்து வருவது சர்ச்சையாகியுள்ளது.

இந்திய, சீன எல்லைப் பகுதியில் படைகளை அவ்வப்போது இரு நாட்டு ராணுவமும் குவித்து வந்தாலும் இந்த முறைப் போர் பதற்றம் ஏற்பட முக்கிய காரணம், இந்தியச் சீன எல்லைப் பகுதியான அக்ஸாய் சின் அருகே பாங்கோங் தச்சோ ஏரி.

குறிப்பாக இந்த பாங்கோங் தச்சோ ஏரி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் சீனா எந்தவித கட்டுமானப் பணிகளையும் செய்யக் கூடாது என்பது விதி. எனினும் சீனாவுக்கு இந்த ஏரி அமைந்துள்ள பகுதி மிகவும் முக்கியமானது. காரணம் 1962 இந்தியாவுடனான போரைச் சீனா தச்சோ ஏரி அமைந்துள்ள பகுதியிலிருந்து தான் தொடங்கியது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இந்திய- சீன எல்லையைக் கடந்து இந்தியாவின் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த சீனா, பாங்கோங் தச்சோ ஏரி பகுதியில் ராணுவ முகாம்களை அமைத்துள்ளது. இது குறித்து தகவலறிந்து இந்திய ராணுவத்தினர் அப்பகுதிக்குச் சென்று சீன ராணுவத்தின் செயலை தட்டிக் கேட்டுள்ளனர்.

இதனால் பிரச்சினை இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் கைச்சண்டையாக மாறியுள்ளது. கம்பி, கட்டை உள்ளிட்டவற்றை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சண்டை காரணமாக இருநாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான ராணுவத்தினர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க: சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா வீரர்களிடையே மோதலால் பதற்றம்

சீனா இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான சீன ராணுவத்தினரைக் குவித்துள்ளது. இந்த ராணுவத்தைக் குவிக்க இந்திய- சீன எல்லைப் பகுதியில் சுமார் 15 கிமீ வரை சாலை அமைத்துள்ளதாகத் தெரிகிறது.

அதே வேளையில் குறிப்பிட்ட பகுதியில் சீனாவுக்கு இணையான ராணுவத்தை இந்தியாவும் குவித்து வருகிறது. மேலும் இந்தியா தனது விமானப்படைகளையும் குவித்து வருகிறது. இந்திய ராணுவம் லடாக்கை ஒட்டியுள்ள பகுதியை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது என்று கூறப்படுகிறது.

பல வருடங்களாக அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள், லடாக்கை ஒட்டியுள்ள சில பகுதிகளைக் குறிவைத்து செயல்படும் சீனா, இந்த முறை அதைக் கைப்பற்றும் நோக்கில் இந்த செயலை செய்து வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதட்டமான சூழல் தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பலதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியபோதும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் இப்போதும் இந்திய அதிகாரிகள் சீனா, பெய்ஜிங்கில் உள்ள அந்நாட்டு ராணுவ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: ஹாங்காங்கில் வெடித்தது போராட்டம்.. சீனா மீது பொருளாதாரத் தடை விதிக்க எச்சரிக்கும் அமெரிக்கா