கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதில் நோய் பரவாமல் தடுக்க தெருக்களில் கிருமி நாசினி மற்றும் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

திறந்தவெளிகளில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெருக்கள் மற்றும் மார்க்கெட் போன்ற திறந்தவெளி பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் மருந்துகள் தெளிப்பதால் கொரோனா வைரஸ் அல்லது மற்ற நோய் கிருமிகளை அழிக்க முடியாது. ஏனென்றால் கிருமி நாசினிகள் அழுக்கு மற்றும் குப்பைகளால் செயலிழக்கப்படுகின்றன.

மேலும் வாசிக்க: இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘கோவிட் கவாச் எலிசா’- ICMR ஒப்பந்தம்

அதே வேளையில் கிருமி நாசினிகள் அதிக அளவு சாலையில் தெளிப்பது மக்களின் உடல் நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதேபோல் எந்த சூழ்நிலையிலும் தனி நபர்கள் மீது கிருமி நாசினி தெளிக்க பரிந்துரைக்கப்படவில்லை.

மக்கள் மீது கிருமி நாசினி தெளித்தால் உடல் பாதிப்புகள் ஏற்படும். இது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தீங்கை விளைவிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகள் மற்றும் தொடர்பு மூலம் வைரசை பரப்பும் திறனை குறைக்காது.

மேலும், குளோரின் மற்றும் பிற நச்சு ரசாயனத்தை தெளிப்பது கண், தோல் எரிச்சல், மூச்சு குழாய் அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கிருமி நாசினி பயன்படுத்த வேண்டுமென்றால் கிருமி நாசினி நனைக்கப்பட்ட துணியால் துடைக்க வேண்டும் எனவும் WHO எச்சரித்துள்ளது.