தமிழகத்தில் ஜூன்.1 முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா உள்ளிட்டவை சில நிபந்தனைகளுடன் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. அதில்

சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் உள்ளிட்ட அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறித்து கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க: ஏழைகளின் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது- பிரதமர் மோடி வேதனை

அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்களின் நுழைவாயிலில், சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது சானிடைசரை நுழைவாயிலில் வைக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின் வைக்கப்படுவதோடு, அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அழகூட்டும் பணியினை துவங்கும் முன்பும், சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சுத்திகரிப்பானைக் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளரும், பணியாளர்களும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். மேலும் அடிக்கடி தங்களது மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

அழகு நிலையம், ஸ்பாக்களில் பணிபுரியும் பணியாளருக்கு இருமல், சளி அல்லது காயச்சல் இருப்பின், அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பணியில் ஈடுபடக் கூடாது. மேலும், அவர்கள் அரசு மருத்துவரை அணுகி, பரிசோதனை மேற்கொண்டு மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். இதனை ஒவ்வொரு அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் உரிமையாளர் கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும்.

காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் இருக்கும் போது அழகு மற்றும் பிற சேவைகளுக்கு அழகு நிலையம், ஸ்பாக்களுக்கு வாடிக்கையாளர்கள் வரக்கூடாது.

சமூக விலகலை பின்பற்றும் வகையில், ஒரே நேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தவிரிக்கும் பொருட்டு இயன்றவரை முன்பதிவு அடிப்படையில் மற்றும் இதர சேவைகள் வழங்க வேண்டும். மேற்கூறிய அறிவிப்புடன் கூடிய காட்சிப் பலகை வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.