போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமாக பரவியிருந்த நேரத்தில் மருத்துவமனைகளில் நிலவிய ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசும் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியதை அடுத்து, கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மே 31 ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி நடைபெற்றது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தென்மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி காலம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால்,

அந்த அனுமதியை மேலும் நீடிக்கக் கோரி, தூத்துக்குடி சிப்காட் மற்றும் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஊழியர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்த வழக்கை ரத்துச் செய்யக் கோரியும், ஸ்டெர்லைட் துணைத் தலைவர் உள்பட பலர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், கொரோனா மூன்றாவது அலை பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்கும் பொது நோக்கத்துடன் தான் ஆக்சிஜன் உற்பத்தியை நீடிப்பு செய்ய கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் இன்று (17.12.2021) உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.