கோவையை அடுத்த பொள்ளாச்சி அருகே விவசாய நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பொள்ளாச்சியை அடுத்துள்ள கிராமங்கள் வழியாக, உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு கோவையை அடுத்த பொள்ளாச்சி அருகே விவசாய நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
பொள்ளாச்சி புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக 16 உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க பணிகள் தொடங்கியது.
 
இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களில் கோபுரங்கள் அமைக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் பெரும்பதி கிராமத்தில் இன்று பணிகள் நடப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மோடியின் மத்திய அரசு மற்றும் அதிமுக மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
 
இதனால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
 
விவசாயிகள் போராட்டம் காரணமாக இன்று உயர்மின் கோபுர பணிகள் முன்னதாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் கடும் எதிர்ப்பு காரணமாக போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
அப்போது போலீசாருக்கும் விவசாயிகளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசார் கைது செய்தனர்.
 
மேலும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் நலனை கருத்தில் கொள்ளவில்லை என்றும், தமிழக அரசுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்வியில் முடிந்துள்ளது என்றும், தெரிவித்த விவசாயிகள், ஏற்கனவே கோபுரங்கள் அமைக்கப்பட்ட இடத்தின் உரிமையாளர்களுக்கு அதிகப்படியான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள பகுதிகளில் பூமிக்கடியில் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.