நடிகர் விஜய் சேதுபதி வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆர்த்தி, ஆதித்யா என்ற இரண்டு புலிக்குட்டிகளை தத்தெடுத்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் சமூக நலனில், அதிக அக்கறை கொண்டவராகவும் உள்ளார். முடிந்த அளவு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி, இரண்டு புலிக்குட்டிகளை தத்தெடுத்துள்ளார். ஆர்த்தி, ஆதித்யா என்ற இரண்டு புலிக்குட்டிகளின் ஆறு மாதத்திற்கு தேவையான பரிமாரிப்பு செலவாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை விஜய் சேதுபதி பூங்கா அதிகாரிகளிடம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, “விலங்குகள் வெகுளியானது. அதனால் தான் எனக்கு அக்கறை உண்டு. வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுக்க முடியும் என தெரியவந்தது.

பிரபலங்கள் விலங்குகளை தத்தெடுத்தால், பலர் விலங்குகளை தத்தெடுக்க ஆர்வம் காட்டுவார்கள். புலிகளுக்கு தேவையான ஆறு மாதத்துக்கான பராமரிப்பு செலவு ரூ.5 லட்சத்தை நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.