தேவ் படத்தை தொடர்ந்து, நடிகர் கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். ரஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும்.

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படத்தில் வெளியான ‘இன்கேம் இன்கேம்’ பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அனைத்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரஷ்மிகா மந்தனா.

இதுகுறித்து இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் கூறியிருப்பதாவது “ஹோம்லி கதாபத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் ஒருவரை நான் தேடி வந்தேன். ரஷ்மிகா மந்தனா இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது.

இது ஆக்‌ஷன் கலந்த குடும்பத்திரைபடமாக அமைய உள்ளது. படத்தில் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் யோகி பாபு மற்றும் மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கவிருக்கும் நிலையில், படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.