தல அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் பாடல்கள் எழுதவிருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் இடம்பெறவுள்ள பாடல்கள் குறித்த அறிவிப்பை கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பா.விஜய் தெரிவித்தார்.

ஏற்கனவே அஜித் நடித்த பில்லா, ஆரம்பம், ஏகன் திரைப்படங்களில் பா.விஜய் பாடல்கள் எழுதியுள்ளார். தற்போது மீண்டும் அஜித்-யுவன் கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பாடல்கள் எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே.1ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்ற்கிடையில், நயன்தாராவை வைத்து ‘ஐரா’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் சர்ஜூன், நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை இருக்கிறது, கதை இருக்கிறது என அண்மையில் பேட்டியளித்துள்ளார்.