இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பின்பற்றும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கொரோனா குறித்த அச்சத்தை பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததற்காக சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கொரோனில் என்ற பெயருக்கு வணிகச்சின்னத்தையும் பதிவு செய்து, 2027 ம் ஆண்டு வரை அமலில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா கொரோனாவை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் அதன் பெயர் கொரோனில் எனவும் கூறி, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டது சர்ச்சையானது.

இந்த மருந்தின் அங்கீகாரம், மத்திய அரசின் ஒப்புதல் குறித்து பொதுமக்கள் உட்பட பலரும் பாஜக மோடி அரசிடம் கேள்வியெழுப்பினர். இதனையடுத்து இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தும் மருந்து இல்லை, இது வெறும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் மருந்து என பதஞ்சலி மாற்றி விளக்கமளித்து.

மேலும் வாசிக்க: 100% கொரோனாவை குணப்படுத்தும் மருந்து.. அந்தர் பல்டி அடித்த பதஞ்சலி

இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்தத் தடையை நீக்கக் கோரியும், தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியும் பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், “கொரோனில் என்னும் பெயரை ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த ஆருத்ரா எஞ்சினியர்ஸ் என்னும் நிறுவனம் பதிவு செய்துள்ளதால் இந்த பெயரைப் பதஞ்சலி நிறுவனம் பய்னபடுத்தக்கூடாது.

மேலும் இந்த நிறுவனம் முதலில் கொரோனாவுக்கு மருந்து என அறிமுகப்படுத்திய மருந்து சளி, இருமல், ஜுரத்துக்கு எதிராக எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்தாகும்.

மேலும், 10,000 கோடி ரூபாய் நிறுவனம் எனக் கூறும் பதஞ்சலி நிறுவனம், கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி, மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து,

அதில் ரூ.5 லட்சத்தை அடையாறு புற்று நோய் நிலையத்துக்கும் ரூ,5 லட்சத்தை அரும்பாக்கம் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் அளித்து விட்டு அந்த விவரங்களைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.