: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை :

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அரசு பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடை விதிக்க கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு பணத்தில் கூடாது நினைவிடம் அமைக்க கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மக்களின் வரிப் பணத்தை பள்ளிகள், சுகாதார வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முதன்மையான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டுமே தவிர ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு நினைவிடம் அமைக்க கூடாது எனவும், அப்படி நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், இனிமேல் மெரினாவில் நினைவிடங்கள் கட்ட அனுமதிக்க கூடாது என உத்தரவிடவும் கோரியுள்ளார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வு, இந்த மனு குறித்து செப்டம்பர் 18ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.