மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு மின் நுகர்வோர்களின் தொலைபேசி எண்களை மின் இணைப்புடன் இணைத்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளை பெற்றிருக்கும் மின் நுகர்வோர்கள் பற்றிய விவரங்களை புதுப்பிக்கும் பொருட்டு அவர்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது ஒன்றிய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்க அனைத்து மின் அலுவலகங்களிலும் நவம்பர் 28 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், “மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதிக்கு மேல் கால அவகாசம் வழங்கப்படாது.

02.01.2023 முதல் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மீண்டும் செயல்படும். மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிக்காக கூடுதலாக 2811 நடமாடும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.

மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலங்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்கள் மூலம் தங்களது மின் இணைப்பு எண்ணிணை ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம்.

இது தவிர ஆன்லைன் மூலமும் மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற லிங்கில் ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பொழுது தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் கிடைக்கப் பெறுவதோடு, ஏற்கனவே பெயர் மாற்றம் செய்யப்படாமல் இறந்து போன/பழைய மின் இணைப்பு உரிமைதாரர்களின் பெயர்களில் இருக்கும் மின் இணைப்புகளை தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்களுக்கு தகுந்த ஆவணங்களின்படி பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. இதனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு மின் இணைப்பு உரிமையாளர்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் கிடைக்கப்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.