தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ந் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நவமபர் 16 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி.

பள்ளி /கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16.11.2020 முதல் செயல்பட அனுமதி.

2.11.2020 முதல் தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், மற்றும் 16.11.2020 முதல் பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக கோயம்பேடு அங்காடி வளாகத்தில் செயல்பட அனுமதி.

பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.

சின்னதிரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் (multiplex), வணிக வளாகங்களில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் நவம்பர் 16 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில், நடத்த அனுமதிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 10 முதல் செயல்பட அனுமதி.

திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதி.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா சாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு; பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சியா..