விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கிய வர்மா படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வேறொரு இயக்குநரை வைத்து மீண்டும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்தாண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் அர்ஜுன்ரெட்டி. தமிழிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் தேவரகொண்டாவிற்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதனால் இப்படத்தை தமிழில் பாலா இயக்க, நடிகர் விக்ரம் மகன் துருவ் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ரதன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகிய இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. சமீபத்தில் வெளியான வர்மா டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், இப்படம் கைவிடப்படுவதாக தகவலை வர்மா படத் தயாரிப்பு நிறுவனமான இ4 என்டர்டெயின்மென்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் பட நிறுவனம் அறிவித்துள்ளது.

இதிலும், நாயகனாக துருவ்வே நடிக்க இருப்பதாகவும், வரும் ஜூன் 2019க்குள் முழுப்படத்தையும் எடுத்து முடித்து ரிலீஸ் செய்யப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலா இயக்கியதில் திருப்தி இல்லாததால் தயாரிப்பு தரப்பில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பாலா இயக்கிய சேது படம் மூலம் அறிமுகமான விக்ரமிற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.