மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இருப்பதகாவும், அதை நீக்க வேண்டும், இல்லையென்றால் அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர் குழு அவரது அலுவலகத்தை முழுவதுமாக சோதனையிட்டதில், அந்த தொலைப்பேசி அழைப்பு பொய்யானது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என்ற செய்தி கோலிவுட்டில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.