இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், விராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள வீராங்கனைகள் பேசும்போது, “எங்களுடைய பதக்கங்கள் அனைத்தையும் திரும்பப்பெறுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்” என ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் காலம் தாழ்த்தியதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, இருப்பினும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இந்த வழக்கில் உத்தரவிட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “குற்றம்சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மனுதாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளுடன் நீங்கள் இங்கு வந்தீர்கள்.

இரண்டு கோரிக்கைகளும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு ஏதாவது நிவாரணம் வேண்டும் என்றால் நீங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட நீதித் துறை நீதிமன்றத்தையோ நாடுங்கள்” என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய மல்யுத்த வீராங்கனைகள், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு பின்னடைவு அல்ல. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன செய்ய முடியுமோ அதனை செய்துள்ளது. எங்களின் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் கூறும்போது, “இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு ஆதரவாக இருந்து கொண்டு நாங்கள் பொய் கூறுகிறோம் என்று சொல்பவர்களிடம், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

யார் தப்பு செய்திருந்தாலும், அவர்களை தூக்கிலிடுங்கள். நிர்பயா வழக்கின் போது வழங்கியதை போன்றே நாட்டில் உள்ள மகளிர் அனைவரும் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாங்களும் பெண்களுக்காகவே போராடி வருகிறோம்.

இதில் நாம் வெற்றி பெற்றால், மிகவும் உறுதியான தகவலை உலகிற்கு தெரிவிக்க முடியும். ஆனால் தோல்வியுற்றால் நாம் 50 ஆண்டுகள் பின்செல்ல வேண்டி இருக்கும்” என்று தெரிவித்தார். போராட்டத்தின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கருப்பு நிற பேண்ட்களை அணிந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர்.