நாட்டிலேயே முதன்முறை முன்னெடுப்பான, 300 கோடி ரூபாய் செலவில் ‘Gender Park’ என்னும் பாலின பூங்கா திட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவத்துறையில் மிகப்பெரிய சுகாதாரக் கட்டமைப்பை மக்களுக்காக உருவாகிய மாநிலம் என்றால், அது கேரளா தான்.

எளிய மக்களுக்கு சானிடைசர், முகக்கவசம், வீடு தேடி உணவுப் பொருட்கள் விநியோகம் என தொடங்கி கொரோனா தடுப்பு மருந்துகள் என அனைத்தையும் இலவசமாக வழங்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்புக் காட்டியது கேரள அரசு.

அதுமட்டுமல்லாது, பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை பாதுகாப்பத்திலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் அக்கரைக்காட்டும் அரசாக கேரள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலகிலேயே முதன்முறை முன்னெடுப்பான, 300 கோடி ரூபாய் செலவில் ‘Gender Park’ என்னும் பாலின பூங்கா திட்டத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. கேரளாவின் சுகாதாரம், சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் செயல்படும் இப்பூங்காவில் பாலின அருங்காட்சியகம், நூலகம், மாநாட்டு மையம், ஆம்பி தியேட்டர் ஆகியவை திறக்கப்பட்டன.

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரத்தை நோக்கமாக கொண்டு மாநில அரசு அமைத்துள்ள கோழிக்கோடு வெல்லிமட்குன்னில் உள்ள பாலின பூங்கா மற்றும் IGCE-11 என்னும் பாலின சமத்துவத்துக்கான சர்வதேச கருத்தரங்கத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த ஞாயிறன்று தொடங்கி வைத்தார்.

இந்த நூலகத்தில், பாலின சமத்துவம் குறித்த சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெளியிடப்பட்ட கருப்பொருள்களின் பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் பதிப்புகள் பாலின நூலகத்தில் கிடைக்கின்றன. மேலும், அதிநவீன மாநாட்டு மையத்தில் 500க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய திறன் இருக்கும். பசுமையான பின்னணியில் ஆம்பி தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

அதேப்போல், வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து பெண்கள் சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள், பெண்கள் மறுமலர்ச்சி இயக்கங்கள் மற்றும் கேரளாவின் போராட்டங்களை இந்த அருங்காட்சியகம் உள்ளடக்கியுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியான ஐ.நா.பெண்களுக்கான சமவாய்ப்பு நிறுவனத்துடன் ஒத்துழைக்க, பாலின பூங்கா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் வர்த்தக மையம், UNWomen உடன் இணைந்து, பெண் தொழில்முனைவோருக்கு சர்வதேச வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புகளையும் வழங்குகிறது.

அதுமட்டுமல்லாது, பெண் தொழில்முனைவோருக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான சூழலையும் சந்தையையும் உருவாக்குவதற்கான சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

விழாவில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “பாலின பூங்கா என்பது நாடும் உலகமும் உற்றுநோக்கும் கேரள அரசின் ஒரு முன்முயற்சி நிறுவனமாகும். இந்த ஆட்சிக் காலத்தில் இதை செயல்படுத்துவதில் பெருமை அடைகிறேன். தெற்காசியாவிலேயே பாலின சமத்துவத்திற்காக செயல்படும் அனைத்து அமைப்புகளின் மையமாக இந்த பூங்கா மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரம், சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அமைச்சரான ஷைலஜா கூறுகையில், பாலின சமத்துவ பூங்காவின் முதல் கட்டமாக மாநிலத்தில் பாலின சமத்துவத்தை நோக்கி செயல்படும். இத்தகைய முயற்சி இந்திய நாட்டில் மட்டுமல்ல, முழு உலகிலும் முதன்மையானது எனத் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவிற்குச் செல்லும் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பலரும் இந்த பாலின பூங்கா (Gender Park) திட்டத்திற்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் திட்டமிட்டு திணிக்கப்படும் இந்தி, சமஸ்கிருதம்: RTI அதிர்ச்சி தகவல்