உத்தர பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17, 10, மற்றும் 8 வயது கொண்ட மூன்று சிறுமிகள் தங்கள் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நுழைந்து ஆசிட் வீசி சென்றுள்ளனர்.

காயமடைந்த மூன்று சிறுமிகளும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மீது ஆசிட் வீசிய நபர்களை காவல்துறையினர் தேடி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை கூறுகையில், “எனது மூத்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. அவருக்கு அதிகமான காயம் ஏற்பட்டுள்ளது. இப்போது திருமணம் நடைபெறுவதே கேள்விக்குறி ஆகியுள்ளது” என வேதனை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, “பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களை பாதுகாக்கும் உத்தர பிரதேச அரசின் செயல் மாநிலம் முழுவதும் குற்றவாளிகளைத் தூண்டியுள்ளது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும் வாசிக்க: உபியில் கைது செய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகள் கைநாட்டு கடிதம் வெளியே வந்தது எப்படி கேள்வியால் போலிஸ் திணறல்