#MeToo மூலம் வெளிச்சத்துக்கு வரும் நடிகைகளின் பாலியல் ரீதியிலான புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் இந்தி நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து மேலும் பாதிக்கப்பட்ட பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர்.

இதற்காக சமூக வலைதளத்தில் #MeToo மூலம் பல பெண்கள் பாலியல் புகார்களை வெளியிடப்பட்டனர். இதில் பாஜக மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

தென்னிந்தியாவில் பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி என பல இடங்களில் தனக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்தார். இதேபோல் மேலும் பல பாடகிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சின்மயிக்கு நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, ஆன்ட்ரியா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர்.

இதுபற்றி சண்டக்கோழி – 2 படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால் பேசுகையில், வைரமுத்து மீது சின்மயி கூறும் புகார் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

#MeToo புகார்கள் குறித்து விசாரிக்க திரைத்துறையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழுவில் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரது பிரதிநிதிகள் தலா ஒருவர் இடம் பெறுவார்கள் எனக் கூறினார்.

மேலும் டுவிட்டரில் கருத்து தெரிவித்தால் தான் குரல் கொடுக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக சொன்னால் நடக்க வேண்டியது நடக்கும். சின்மயி உடனடியாக தனது புகாரைத் தெரிவித்திருக்க வேண்டும். அவர் யாருக்காகவும் பயப்பட்டிருக்கக் கூடாது. அப்படி செய்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். நடிகை அமலா பாலுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்ட போது, அவருக்கு பக்க பலமாக நின்றேன்” என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே #MeToo -வில் வரும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி அறிவித்து இருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய 4 பேர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். தற்போது நடிகர் சங்கமும் குழு அமைக்க முடிவு செய்து இருப்பதன் மூலம் பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுக்கிறது.