மனுஸ்மிருதி சர்ச்சையில் தொல்.திருமாவளவனுக்கு எதிரான தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட காணொலி கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனுதர்ம நூலை மேற்கோள் காட்டி பெண்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

பெண்களைத் திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டதாக பாஜக, இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தின. காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், திருமாவளவன் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தான் பெண்களை இழிவுபடுத்திப் பேசவில்லை. மனுஸ்மிருதியில் கூறப்பட்டிருப்பதையே மேற்கோள் காட்டியதைத் திரித்துப் பேசுகிறார்கள் எனவும், மனுஸ்மிருதியைத் தடைசெய்யக் கோரியும் தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.

இந்நிலையில், தனது சொந்த அரசியல் லாபத்திற்காக இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்ததாகவும் அவர் மீது நாடாளுமன்ற செயலாளர் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், “2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல. அவர் அளித்துள்ள விளக்கம் தவறானது.

திருமாவளவனின் சர்ச்சைப் பேச்சு காரணமாக தமிழகத்தில் அமைதியற்ற சூழல் உருவாகியுள்ள போதும், அவர் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசி வருகிறார். இதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதாகக் கூறி அவர் எடுத்துக்கொண்ட, பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘உறுதிமொழியை மீறிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடாளுமன்ற செயலாளருக்கு அக்டோபர் 27ம் தேதி மனு அளித்ததாகவும், அதனை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்’ எனவும் கூறப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், மனுஸ்மிருதி குறித்து திருமாவளவன் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்; அது அவருடைய பேச்சுரிமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி திருமவளவனுடைய பேச்சுரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது.

பேச்சுரிமை அளவுக்கு அதிகமாக மீறும் போது அது தொடர்பாக தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, நீதிமன்றம் தலையிட முடியாது. அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, மனுதாரர் மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மனுஸ்மிருதி மேட்டரில் காயத்ரியின் அதிங்கபிரசிங்கியான பதிவால் கணக்கை முடக்கி ட்வீட்டர் அதிரடி