வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் 2007- 2008 ஆம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து, 2011 ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வருமான வரி தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2007-08, 2008-09 ஆம் ஆண்டுளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.

இந்நிலையில், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரி சட்டப்படி மாதம் ஒரு சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், தான் முறையாக வரி செலுத்தி வருவதாகவும், தீர்ப்பாய கால தாமதத்துக்கு வருமான வரித்துறையே காரணம் என்பதாலும், வருமான வரி சட்டப்படி வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும், ஆனால் சூர்யா தாமதமாகவே கணக்கை தாக்கல் செய்தார் என வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

வருமான வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், சோதனைக்கு பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையென என்றும் வருமானவரி தரப்பில் வாதிடப்பட்டது.

வருமான வரித்துறையின் இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தினர் நடிகர் விஜய்!