ஊரடங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும், ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், நாடு முழுவது மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

4-ம் கட்ட ஊரடங்கிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அவசியமின்றி வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஊரடங்கில் வெளியே வருபவர்கள் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,92,981 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மூன்று லட்சத்து 79 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் 5 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: ஜெயஸ்ரீ எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி- சென்னை உயர் நீதிமன்றம்

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லக் கூடிய பொது மக்களைத் துன்புறுத்த கூடாது என உத்தரவிட கேட்டுக் கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, இதுபோன்ற சூழலில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். ஊரடங்கில் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்து உள்ளது.