சார்லி சாப்ளின் 2 படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ப்ளூ சட்டை மாறன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, பிரபு உள்ளிட்டோர் நடித்த சார்லி சாப்ளின் 2 படம் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் ஷக்தி சிதம்பரம் யூடியூப் ப்ளூ சட்டை மாறன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஷக்தி சிதம்பரம் அளித்த மனுவில், “ஷக்தி சிதம்பரமாகிய நான் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு வெற்றிகரமான திரைப்படங்கள் தயாரித்தும், இயக்கியும், தமிழ்த்திரை உலகில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறேன். தற்போது தயாரிப்பாளர் திரு டி. சிவா தயாரிப்பில், பிரபுதேவா நடிப்பில் சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தை இயக்கி 25.01. 2019 அன்று தமிழகம் உள்பட உலகம் எங்கும் பல்வேறு திரையரங்குகளில் வெளியிட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 26.01.2019 அன்று தமிழ் டாக்கீஸ் என்ற பெயரில் புளுசட்டை மாறன் என்பவர் சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தை யூடியூப்- விமர்சனம் செய்ய போவதாகவும் அதில் விளம்பரம் செய்வதற்கு பெரும்தொகையை கேட்டும் வற்புறுத்தினார். புளுசட்டை மாறன் சமீபகாலமாக பல திரைப்படங்களை தவறாக விமர்சனம் செய்வதாக மிரட்டி பணம் வாங்கிய விபரம் திரையுலகினர் அறிந்ததே.

நாங்கள் விளம்பரமோ, பணமோ தர இயலாது என மறுத்ததால் மேற்படி சார்லி சாப்ளின் 2 படத்தை மிக மிக தரக்குறைவான வகையிலும் ஒருமையில் பேசியும் விமர்சனம் செய்துள்ளார். இதை கண்டு பேரதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் புளுசட்டை மாறனின் தவறான விமர்சனத்தால் கோடிக்கணக்கில் முதலீடு செய்த அவர்களுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தங்களது அச்சத்தை வெளிப்படுத்தினார்கள்.

நான் புளுசட்டை மாறனிடம் அலைபேசியில் பேசும்போது”ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதே நேரத்தில் படத்தின் மையக் கருவான வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பிய குறுஞ்செய்தியை 1 மணிநேரம் 7 நிமிடத்தில் டெலிட் டெய்யலாம் என்றும் தகவலை படத்தில் தெளிவாக காட்டியிருக்கிறேன். ஆனால் தங்களது விமர்சனத்தில் அப்படி ஒரு விஷயத்தையே காட்டவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.

மேலும் இயக்குனர் தயாரிப்பாளர் உட்பட படத்தின் ஒட்டு மொத்த குழுவையும் ஒருமையில் வன்மையாக பேசியதையும் கடும் சொற்களை உபயோகப்படுத்தியதையும் வாபஸ் பெற வேண்டும்” என்று நாகரீகமாக கேட்டேன். ஆனால் புளுசட்டை மாறன் அவர்கள் கடும் கோபத்துடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தனக்கு என ஒரு வீயூவர்ஸ் குரூப் வைத்துக் கொண்டு, படத்தை பார்க்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதை புளுசட்டை மாறன் மீறியுள்ளார். சமூக வலைதளம் மூலம் தவறாக துஷ்பிரயோகம் செய்த தமிழ் டாக்கீஸை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் பல கோடி ரூபாய் முதலீடு செய்த தயாரிப்பாளர் திரு. டி. சிவா அவர்களுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பிற்கும் எனக்கும் எங்கள் குழுவிற்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் புளுசட்டை மாறன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஷக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.