தமிழகத்தில் இன்று (ஜூலை 26) ஒரே நாளில் கொரோனவால் உயிரிழந்த 85 பேரில், 15 வயது சிறுமி உள்பட 10 பேர் எந்த நோயாலும் பாதிக்கப்படாத நிலையில் கொரோனாவின் தீவிரத்தால் மூச்சுதிணறல் ஏற்பட்டு பலியாகி உள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 7,000த்தை எட்டியது. இன்று பாதிக்கப்பட்ட 6,986 பேருடன் சேர்த்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 1155 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 94,695 ஆகும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மட்டுமல்ல, உயிரிழப்பும் வேகமாக உயர்ந்து வருகிறது. அதிலும் எந்த நோய் தொற்றாலும் பாதிக்கப்படாதவர்கள் கொரோனாவின் தீவிரத்தால் பலியாவது அதிகரித்து கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 85 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதில் 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 49 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தவர்கள். தஞ்சாவூரில் 15 வயது சிறுமி உள்பட 10 பேர் எந்த நோயாலும் பாதிக்கப்படாத நிலையில் கொரோனாவின் தீவிரத்தால் மூச்சுதிணறல் ஏற்பட்டு பலியாகி உள்ளனர்.

சென்னையில் இதுவரை 2011 பேர் பலியாகி உள்ளனர். இன்று (ஜூலை 26) மட்டும் சென்னையில் 26 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மதுரை-8 பேர், செங்கல்பட்டு- 5, திருவள்ளூர்- 5, விருதுநகர்- 5, திருநெல்வேலி- 4, வேலூர்- 4, ராணிப்பேட்டை- 3, கன்னியாகுமரி- 3, திருவண்ணாமலை- 3 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிபட்சமாக சென்னையில் 1155 பேர், செங்கல்பட்டில் 501 பேர், திருவள்ளூரில் 480 பேர், விருதுநகரில் 385 பேர், ராணிப்பேட்டையில் 367 பேர், தூத்துக்குடியில் 248 பேர், தேனியில் 216 பேர், மதுரையில் 209 பேர், விழுப்புரத்தில் 201 பேர், திண்டுக்கல்லில் 203 பேர், கோவையில் 220 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று…