ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம். சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற ஆயுஷ் மருத்துவ முறைகள், அலோபதி மருத்துவம் ஆகியவை ஒன்றிணைக்கப்படும் என்று மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் உள்ள அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

முதற்கட்டமாக அவர்கள் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கும் அரசு செவிசாய்க்காத நிலையில் இன்று இன்று ஒருநாள் தமிழகத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உயிர்காக்கும் சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகள் அளிப்பதில்லை என்று முடிவு செய்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைவதாக கூறி, மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தொடர்ந்த முறையீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர், பழனிசாமியை நேருக்கு நேர் விவாதிக்க அழைப்பு