“பூமராங்” படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அவர்களின் கனவு, இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பது. குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைக்க அரசு முயற்சி செய்தால் அதற்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளிக்க தயார் என்றும் ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தார்.

இதுவரை நதிகளை இணைக்க எந்த அரசும் முயற்சிக்காத நிலையில் ரஜினியின் கனவை இயக்குனர் ஆர்.கண்ணன் தனது ‘பூமராங்’ படத்தில் நிறைவேற்றியுள்ளார். இந்த படத்தின் கதை நதிகளை இணைக்க ஹீரோ செய்யும் முயற்சிதான் என்பது இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரிய வந்தது.

இந்நிலையில் பூமராங் படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் உள்பட படக்குழுவினர் இன்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ரஜினிகாந்த் இப்படத்தின் கதை குறித்து கேட்டறிந்து இப்படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தார். இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.