இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த “வடசென்னை” படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வடசென்னை தமிழகத்தில் மட்டுமே 3 நாட்களில் ரூ 18 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் ரவுடிகளுக்குள் ஏற்படும் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஆபாச வசனங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், வடசென்னை திரைப்படத்தில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ படத்தில் ஆபாச வசனங்கள் நிறைய உள்ளன. முகம் சுழிக்கும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

சமூக அக்கறை இல்லாமல் பார்வையாளர்களின் மனதை புண்படுத்தி காயப்படுத்தும் நோக்கில் இயக்குனர் வெற்றிமாறனால் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. பொது இடத்தில் ஆபாச வார்த்தைகள் பேசுவது, பாடுவது போன்றவை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமாகும்” என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது.