மதிய உணவுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களால் தமிழ்நாடு படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலமாகத் திகழ்கிறது என யுனிசெப் (UNICEF) இந்தியாவின் தலைவர் ஹுயூன் ஹி பான் பாராட்டியுள்ளார்.

குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட உள்ள ‘தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்புக் கல்விக் கழகம்’ உருவாக்கத்தில் யுனிசெப் பங்கேற்க இருப்பதாக அதன் இந்தியா பிரிவின் தலைவர் ஹுயூன் ஹி பான் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணவும் தமிழ்நாடு அரசும் யுனிசெப் இந்தியாவும் இணைந்து ஒருங்கிணைந்த சமூக கொள்கை திட்டத்தை செயல்படுத்த உள்ளன.

இதுகுறித்து ஐ.நா.வின் குழந்தைகளுக்கான யுனிசெப் இந்தியாவின் தலைவர் ஹுயூம் ஹி பன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமூக நலத்துறை, நீதித்துறை, காவல்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன.

குழந்தைகள் பாதுகாப்புக்கு பள்ளிக்கல்வித் துறையின் ஈடுபாடும் தொடர்ந்து தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் தொந்தரவு போன்றவை குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமுள்ளது.

பருவநிலை மாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பருவநிலை மாறுபாடால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் மதிய உணவுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களால் தமிழ்நாடு படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலமாகத் திகழ்கிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் திட்டங்கள் யுனிசெப் உதவியுடன் கல்வித்துறையால் செயல்படுத்தப்படுவது பெருமையாக உள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்து யுனிசெப்பின் அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.