துபாயில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றன.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழைக்காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 38 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.

சதிஷா ராஜபக்சே (14), ரவீன் டி சில்வா (15), யாசிரு ரோட்ரிகோ (19), மதீஷா பத்திரானா (14) ஆகியோர் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் விக்கி ஆஸ்ட்வாய் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 32 ஓவரில் 104 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவான்ஷி ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஷெய்க் ரஷீத் 31 ரன்களும் அடிக்க, இந்தியா 21.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.