இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழ்ந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தோனி ஓய்வுபெற்றார். அதன்பின், சஹா இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ததால் அவரால் விளையாட முடியவில்லை. சஹாவை தொடர்ந்து பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், கடந்தாண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். ரிஷப் பண்ட் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதம் விளாசிய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டு முறை 90 ரன்களுக்கு மேல் அடித்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பண்ட், சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட்டில் தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பண்ட் 2 சதங்கள் உட்பட 696 ரன்களை குவித்துள்ளார்.

இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு நாடுகளிலுமே முதன்முறையாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.

90 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய தோனி, 6 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் 9 போட்டிகளிலேயே ஆடியுள்ள பண்ட் 2 சதங்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அவருக்கு ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியளித்துவரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கூறிய விவரம் ” ரிஷப் பண்ட், அதற்குள்ளாக 2 சதங்களை அடித்துவிட்டார். இந்திய அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ரிஷப் பண்ட் இன்னும் நீண்டகாலத்திற்கு ஆடுவார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் தோனி அளவிற்கு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் உலகம் இன்னொரு தோனி .,ஆடம் கில்கிறிஸ்டை அடையாளம் கண்டுவிட்டதாக அவர் புகழ்ந்துள்ளார்.