சிபிஐ-யின் புதிய இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷிகுமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதை அடுத்து புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டார். பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு புதிய சிபிஐ இயக்குனரை அறிவித்துள்ளது. ரிஷிகுமார் சுக்லா மத்திய பிரதேசத்தில் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர்.

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பதவி ஏற்றார்.

பின்னர் அவரை தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவையும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியது. தற்போது சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை எதிர்த்தும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதனையடுத்து  புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் உயர்மட்டக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இரண்டு முறை நடத்தப்பட்டது. ஆனால் கூட்டத்திலும் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், தற்போது சிபிஐ-யின் புதிய இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷிகுமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.