போலியோ சொட்டு மருந்து குறித்த வழக்கில் எதிர்மனுதார்ரகளாக நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் குழந்தைகளுக்கு அளித்து வருவது வழக்கம். இந்நிலையில் நாடு முழுவதும் முறையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தக்கோரியும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கோரியும் பொதுநல வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு விசாரணையின் போது போலியோ சொட்டு மருந்து வழங்குதலில் போதிய விழிப்புணர்வு இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தால் இந்த விஷயம் மக்களிடம் எளிதாக சென்றடையும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.