தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காட்டுமிராண்டித்தனமாக காவல் துறையினர் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக சார்பில் 25 லட்சம் நிதி உதவி, வழங்கி, இந்த இருவருக்கும் ஏற்பட்ட அநீதியும், சோகமும் தன்னைத் தூங்கவிடவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் கடையை திறந்து வைத்தனர் என்பதற்காக வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளத்தில் காவல் துறையினர் தாக்குதலில் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டைக் கொலை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனாவைவிடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்.

இந்த இருவருக்கு ஏற்பட்ட அநீதி, தன்னைத் தூங்கவிடவில்லை என்றும் இவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும், சோகமும் அநீதியும், வார்த்தைகளால் அடக்க முடியாதவை எனவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையையும் மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி, சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும் வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள முடிகளைப் பிய்த்தெறிந்து மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தி உயிர் பறிக்கப்பட்டிருப்பதை பென்னிக்சின் தாயும், சகோதரியும் வேதனையோடும் கண்ணீரோடும் சொல்வதைக் கண்டு தமிழகமே பதறுகிறது.

மேலும் வாசிக்க: சாத்தான்குளம் இரட்டைக் கொலை: தமிழகம் முழுவதும் ஜூன்.26 முழு கடையடைப்பு

இறந்த இருவரின் உடலில் காயங்கள் நிறைந்திருப்பதை மருத்துவக் குறிப்புகளிலும் உறுதி செய்துள்ள நிலையில், உடல் கூராய்வு அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட, துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமு.கழகம் துணை நிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்.

கணவன், மகன் என அன்பான இரண்டு உயிர்களைப் பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் அம்மையார் செல்வராணி அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் ஆறுதலினைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்தம் குடும்பத்திற்கு, திமுகழகத்தின் சார்பில் 25 இலட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி சாத்தான்குளம் காவல்துறை விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறேன். இருவரின் உயிரிழப்புக்கும் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.