சமையல் எண்ணெய் சில்லறைக்கு (பேக்கிங் செய்யாமல்) விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “முந்திரி தோலில் தயாரித்த எண்ணெய்யை சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்கின்றனர். இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. சட்டப்படி எண்ணெய்யை சில்லறை விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்து தான் விற்பனை செய்ய வேண்டும்.

கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனை (பேக்கிங் செய்யாமல்) செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு