நாடு முழுவதும் இன்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் இன்று (18.07.2022) நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு மற்றும் காங்கிரஸ் கூட்டணி உட்பட எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்கா வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதால் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.களும், 18 மாநிலங்களவை எம்.பி.களும் அடங்குவார்கள்.

வாக்குப்பதிவுக்காக எம்.பிக்களுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டும், எம்.எல்.ஏக்களுக்கு பிங்க் நிற வாக்குச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உள்பட ஒன்றிய அமைச்சர்கள், எம்.பி.கள் தங்களது வாக்குககளை செலுத்தினர்.

தமிழக சட்டமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

தமிழக எம்.பி.க்கள் செல்வராஜ், கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தேர்தல் ஆணைய முன் அனுமதியை பெற்று, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் வாக்களித்தனர். மற்ற தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் வாக்களித்தனர்.

சென்னையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவை உதவித் தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலாளர் சீனிவாசன் முன்னின்று நடத்தினார். வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டி சீலிடப்பட்டு, சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.

வருகிற 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து, ஜூலை 25 ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவருக்கு இந்திய தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.