தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை அனைவருடனும் நடித்த கீர்த்தி சுரேஷ் தெங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்துவருகிறார்.

அதிகபடியான படங்கள் நடித்தாலும், சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநதி படம்தான் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தின் மூலம் சிறந்த நடிகை என்று அங்கீகரிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் நடிக்க உள்ளார். பிரபல இந்திய கால்பந்தாட்ட வீரரும், பயிற்சியாளருமான செய்யது அப்துல் ரஹிமின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகிறார்கள். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். அமித் சர்மா இயக்கும் இப்படத்தில் ரஹிமாக அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் கீர்த்தி சுரேஷை வரவேற்கும் விதமாக ஸ்ரீதேவியின் மகள் மற்றும் நடிகையுமான ஜான்வி கபூர் இன்ஸ்டிராகிராமில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “நீங்கள் நடித்த மகாநதி படத்திலிருந்து உங்கள் நடிப்பை கண்டு வியந்து வருகிறேன். மேலும் எனது அப்பா தயாரிக்கும் படத்தில் நீங்களும் ஒரு அங்கம் என்பது எனது மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. உங்களை இந்தி திரைப்பட உலகிற்கு வரவேற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.